அபிராமம் என்ற சொல்லுக்கு அழகு என்று பெயர், அபிராமவல்லி என்றால் அழகுக்கொடி. சிவபெருமானை அழகன் என்றும் சொக்கன் என்றும் அழைக்கும் தலங்கள் சிலவே உண்டு. இக்கோவில் புராணத்தில் மூன்று கதைகள் உள்ளன. முதலில் ஊர் மற்றும் இறைவனின் பெயர்க்காரணம் சொல்லும் கதை இது.ஆதியில் ஆ ( மாடுகள்) குலத்திற்கு கொம்புகள் இல்லாமையால் அவை பிற விலங்குகளால் துன்புற்றன, அவை இத்தல இறைவனை வேண்டி கொம்புகள் பெற்றதால், இத்தலம் ஆ குலத்திற்கு தாய்வீடு எனப் பொருள்கொள்ளும் படி, ஆ மாத்தூர் - கோ மாத்ரு புரம் என்றானது. புராணப்படுத்துதலில் காமதேனுவும், நந்தினியும் , நந்தியும் கூட இங்கு வழிபட்டதென கூறப்படுகிறது. அதற்குச் சான்றாக மூல லிங்கத்தில் பசுவின் குளம்பு பட்ட வடுவுள்ளதாகச் சொல்வர். என்னளவில், இந்த புராண ஏற்றங்களுக்கு அடித்தளத்தில் எதோ ஒரு நாட்டார் கதை ஒளிந்திருக்கக்கூடும் என்று தோன்றும், எல்லா இடங்களிலும் இல்லாவிட்டாலும் ஏதோ ஒருசில சான்றுகள் எஞ்சியிருக்கக்கூடும். கண்ணை மூடி இதை ஒரு நாடோடிக்கதையாக உருவகித்துக்கொள்ளுங்கள், அங்கு மதமோ, சிவனோ இல்லை. பசுக்கள் மேய்ச்சலில் இருக்கின்றன, ஒரு வன்மிருகம் அவற்றை கொன்று வருகிறது, அஞ்சிய