அபிராமம் என்ற சொல்லுக்கு அழகு என்று பெயர், அபிராமவல்லி என்றால் அழகுக்கொடி. சிவபெருமானை அழகன் என்றும் சொக்கன் என்றும் அழைக்கும் தலங்கள் சிலவே உண்டு. இக்கோவில் புராணத்தில் மூன்று கதைகள் உள்ளன. முதலில் ஊர் மற்றும் இறைவனின் பெயர்க்காரணம் சொல்லும் கதை இது.ஆதியில் ஆ ( மாடுகள்) குலத்திற்கு கொம்புகள் இல்லாமையால் அவை பிற விலங்குகளால் துன்புற்றன, அவை இத்தல இறைவனை வேண்டி கொம்புகள் பெற்றதால், இத்தலம் ஆ குலத்திற்கு தாய்வீடு எனப் பொருள்கொள்ளும் படி, ஆ மாத்தூர் - கோ மாத்ரு புரம் என்றானது. புராணப்படுத்துதலில் காமதேனுவும், நந்தினியும் , நந்தியும் கூட இங்கு வழிபட்டதென கூறப்படுகிறது. அதற்குச் சான்றாக மூல லிங்கத்தில் பசுவின் குளம்பு பட்ட வடுவுள்ளதாகச் சொல்வர். என்னளவில், இந்த புராண ஏற்றங்களுக்கு அடித்தளத்தில் எதோ ஒரு நாட்டார் கதை ஒளிந்திருக்கக்கூடும் என்று தோன்றும், எல்லா இடங்களிலும் இல்லாவிட்டாலும் ஏதோ ஒருசில சான்றுகள் எஞ்சியிருக்கக்கூடும். கண்ணை மூடி இதை ஒரு நாடோடிக்கதையாக உருவகித்துக்கொள்ளுங்கள், அங்கு மதமோ, சிவனோ இல்லை. பசுக்கள் மேய்ச்சலில் இருக்கின்றன, ஒரு வன்மிருகம் அவற்றை கொன்று வருகிறது, அஞ்சிய பசுக்கள் உடனே கடவுளிடம் வேண்டின, கடவுள் அவற்றிற்கு கொம்புகளைக் கொடுத்தார். உடனே அவை திரும்ப வந்து அந்த மிருகத்தை விரட்டின, பின் அவைகளெல்லாம் அங்கேயே சந்தோஷமாக வாழ்ந்தன. எப்படியாயினும் இந்த ஊர்ப்பெயரில் இருப்பதால் இந்தக்கதையே இங்கு முதன்மை பெறுகிறது. தத்துவார்த்தமாக பசுக்களை மனித உயிர்கள் என்றுதான் சைவ சித்தாந்தமும் சொல்கிறது.
அடுத்ததாக இராமன் இலங்கைக்கு செல்வழியில் இங்கு சிவபெருமானை வழிபாடு செய்த புராணம், அதற்கு சான்றாக கோவிலில் மூன்று இடங்களில் இராமனின் சிலை உள்ளது. தற்போதுள்ள கொடிமரத்துக்கு பின்னேயுள்ள பலிபீடத்தின் அடியில் இருமருங்கிலும் ராம இலக்குவர் மற்றும் வானர வீரர் உருவமும் வடிக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு வெளியேயுள்ள அர்த்த மண்டப வாயில் நிலையின் பூதவரிக்கு மேலே உள்ள சிற்பம். அடுத்ததாக வெளிச்சுற்றில் உள்ள தனிச்சன்னதியில் உள்ள சிற்பம். இவற்றில் முதலிரு சிற்பங்களும் காலத்தால் மூத்தவையாக தோன்றுகின்றன, அவற்றின் அமைப்பு ராமன் தன் இளையவன் பின் நிற்க, வானரர்களிடம் ஒன்றை குறிப்பாக காட்டுவதாக அல்லது சொல்வதாக உள்ளது. பொதுவாக பலிபீடத்தில் அர்த்த மண்டப முகப்பிலும் இவ்வாறு சிற்பங்கள் இருப்பதில்லை. வெளிச்சுற்றில் உள்ள சிற்பம் இன்னும்கூட தெளிவானது, வில்வீரர் இருவரிடம் ஒரு பெண் வணங்கி நிற்பது போலவும் அவளுக்கு அருகில் மான் அல்லது ஆட்டு முகம் கொண்ட ஒரு பெண் வணங்கியவாறு அமர்ந்துள்ளதாகவும் உள்ளது. இங்கு உள்ள அறிவிப்பு மான்முகம் சாபமாகப்பெற்ற பெண், இராமனை வழிபட்டு சுயஉரு மீண்டதாக தகவல் ஒன்றையும் தெரிவிக்கிறது.கிட்டத்தட்ட அகலிகை கதை போலத்தான். பலிபீடம் தவிர ஏனைய இரண்டும் பலகைக்கல் சிற்பங்கள், வெளிச்சுற்றில் பழைய சிற்பத்துக்கு முன்பாக புதிய சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. தலபுராணத்தில் இக்கதை எங்கனம் குறிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. ஒருவகையில் இந்த இராமாயண, மகாபாரத கதைகளுடன் தலவரலாறுகளை இணைப்பது ஒரு சிறிய நதி பெருநதியில் கலப்பது போலத்தான், இதை நம் மரபு நீண்ட காலமாக அனுமதித்துள்ள ஆதரித்தும் வந்துள்ளது. இந்தியப்பண்பாடு ஒரு பெருங்கடல். இராமன் இங்கு சிவவழிபாடு செய்ததை அப்பர் பெருமான் தன் பதிகத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
குராமன் னுங்குழ லாளொரு கூறனார்
அராமன் னுஞ்சடை யான்திரு வாமாத்தூர்
இராம னும்வழி பாடுசெய் யீசனை
நிராம யன்தனை நாளும் நினைமினே.
மூன்றாவது கதை அம்மைக்கானது, அம்மையப்பனை ஒன்றிணைத்து வணங்காது சிவனை மட்டும் தனியே வழிபட்ட பிருங்கி முனிவரை, அம்மை சபித்த கதை பல தலவரலாறுகளில் உள்ளது. இங்கு பிருங்கி முனிவர் வன்னி மரமாக மாறி இறைவியை தவமிருந்து முத்தியடைந்ததாக சொல்வர். அம்மை கோவிலின் திருச்சுற்றில் வன்னிமரமும் உள்ளது. இதை அம்மைக்கான புராண ஏற்றம் என்று கொள்ளலாம். இல்லாமல் முருகனும், தேவர், முனிவர் பலரும் வழிபட்டதாக தலபுராணம் சொல்கிறது.
இம்மூன்று புராணக் கதைகளையும் விட இன்னும் பிரபலமான கதை ஒன்று உள்ளது, அது முக்தாம்பிகை சன்னதி வெளிச்சுற்றில் உள்ள வட்டப்பாறை அம்மன் பற்றிய கதை. உள்ளூர் மக்களிடம் வட்டப்பாறை அம்மன் சத்தியத்தை காக்கும் தெய்வம் என்று எப்போதும் நம்புகிறார்கள். முன்பொரு காலத்தில், சகோதரர்கள் இருவரிடையே சொத்துத்தகராறு. தம்பி அண்ணன் தன்னை ஏமாற்றியதாக ஊராரிடம் முறையிடுகிறான், அங்கும் அண்ணன் மறுக்கவே தம்பி வட்டப்பாறை அம்மன் முன் அண்ணனை சத்தியம் செய்யச்சொல்கிறான். அண்ணன் ஒரு சூழ்ச்சி செய்து தம்பியின் சொத்துக்களையெல்லாம் பொற்காசுகளாக மாற்றி அதை தன கைத்தடியை மறைத்து வைத்துக்கொண்டு, சத்தியம் செய்யும்முன்பு தடியை தம்பி கையில் கொடுத்துவிட்டு சத்தியம் செய்கிறான். எதுவும் நடக்கவில்லை, தம்பி உன்னையல்லவா நம்பினேன் என்று அழுது புலம்புகிறான். தும்பூர் என்னுமிடத்தில் அண்ணன் செல்கையில் பாம்பு ஒன்று அவனை கடிக்கிறது, அண்ணனின் கைத்தடி நழுவி பொற்காசுகள் கொட்டுகின்றன. அண்ணன் இறந்து போகிறான், ஊரார் உண்மை அறிகிறார்கள். அந்தப்பாம்பின் தலை தும்பூரிலும் அதன் வால்நுனி முக்தாம்பிகையின் மார்பிலும் தெரிய வட்டப்பாறை அம்மனின் சக்தியை அனைவரும் உணர்கிறார்கள். ஒரு அழகிய எளிய நாட்டார் கதை, மேற்சொன்ன புராண விளக்கங்களை விட இக்கதைதான் ஊராரிடம் வழங்கிவருகிறது. தும்பூரில் சுயம்பு நாகாத்தம்மன் கோவில் இன்று பிரசித்தி பெற்றது. முக்தாம்பிகையின் சிலையிலும் இந்த வால்நுனி தெரியும் என்கிறார்கள். இணைப்பாகவே இராமன் வாலியைக்கொன்று அரசை மீட்டளிப்பேன் என்றும் . சீதையை மீட்பதாக இராமனிடம் சுக்ரீவன் வட்டப்பாறையின் முன் சத்தியம் செய்தான் என்றும் வாய்மொழிக்கதைகள் உண்டு.
- தொடரும்
Comments
Post a Comment