Skip to main content

அப்துல் கலாம் - அஞ்சலி - நினைவின் மலர்கள்

அப்துல் கலாம் - அஞ்சலி - நினைவின் மலர்கள்   


அந்த மனிதரைப் பற்றி பதிவிட இரண்டு நாட்களாகி விட்டது. ஆற்றாமையும் நிலைஇல்லா சிந்தனைகளுமே மனதை அழுத்தி விடுகின்றன.

ஏவுகணை மனிதர் என்று அவரை ஊடகங்கள் விளிக்கின்றன,  அவரோ எளிமையின் மனிதராகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

அவர் பிறருக்கு அறிவுறுத்தியதும்  அவரது வாழ்க்கையும் வேறு வேறு அல்ல. ஒன்றே .

என் தலைமுறைக்கு  அவர் ஒரு ஊக்கமிகுந்த வழிகாட்டி , முன்மாதிரி !

அவர்போல் இன்னொரு அரசியல் சார்பற்ற தலைவர், இந்தியர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுவது என்பது நடக்கப்போவதே இல்லை.

அவரது எந்த இயல்பும் போற்றுதலுக்கு உரியதாகவே இருந்தது ,
 எதைச்சொல்ல !

 அவர்  ஐ ஐ டி மாணவனுக்கும் , ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கும் வகுப்பெடுத்தவர், அவர்தம் கேள்விகளுக்காக எப்போதும் செவி கொடுத்தவர்.

முதுமைக்காலத்திலும் தன ஆசிரியரின் முன் இருக்கையில் பொருந்தி அமராதவர்.

ஆக்கப்பூர்வமான அறிவியலின் முகவரி அவர். ஏவுகணையையும் வடிவமைத்துள்ளார்  , மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கைக்காலையும் வடிவமைத்துள்ளார்.

செல்லுமிடமெங்கும் தன் மொழியின் தகைமையை , அறத்தை , ஆக்கங்களை குறள் வழி மொழிந்தவர்.

மதச்சார்பின்மை, மனிதநேயம், நேர்மை, எளிமை, அறிவியல் , லட்சியங்களுக்கான கனவுகள் என அவர் தூவிச்சென்ற விதைகள் இந்தியாவெங்கும் முளைத்திருக்கின்றன.

கல்வியாளர்களும், தொழின்முறை ஆசிரியர்களும் கூட மாற்றத்தின் மீது நம்பிக்கை இழந்த வேளையிலும், கலாமுக்கு மாணவர்களிடத்தும் , இளைஞ ர்களிடத்தும், இந்திய இறையாண்மையிலும், கற்பித்தலிலும் ஒருபோதும் நம்பிக்கை குறைந்ததே இல்லை.

அவர் வலிமையான இந்தியா , நேர்மையான இந்தியா, தூய்மையான இந்தியா
யாவும் வருங்கால இளைஞர்களின் கைகளில் உள்ளது என உணர்ந்து கொண்டவர்.அதை அவர்களுக்கு உணர்த்தி விடவே இறுதி மூச்சு வரை உழைத்தவர்.

அவர் 2020-ல் மீண்டும் இந்தியாவை ஆய்வு செய்து , அதன் எட்டி விட்ட இலக்குகளையும் எட்ட வேண்டிய தொலைவுகளுக்கான திட்டங்களையும் வகுத்தளிப்பார் என பேராவல் கொண்டிருந்தேன். இயற்கை முந்திக்கொண்டது !

அனைத்துக்கும் நன்றி அய்யா ! அமைதியின் நிழலில் துயில்வீராக !

   விழித்திருந்த  அனைவரிடமும் நீங்கள் கனவுகளை விதைத்திருந்தீர்கள்,
   உங்கள் கனவுகளை மெய்ப்படச்செய்வதே இனி எங்கள் பணி!



    

Comments

Popular posts from this blog

வலியது

நிறுவனத்தில் மேலாளர் ஸ்ரீக்கு பதவி உயர்வோடு நீர்சூழ் தீவாந்திர சிட்சை அளித்திருக்கிறார்கள். அக்கணம் மணமருள் பெருமானை துதித்தபடி அனைத்தையும் கைவிட்டு விட்டு நீங்கிவிட்டார். ஒருவாரம் கழித்து பார்த்தேன், பின் அழகிய சிங்கர் ஒருவருக்கு பரிவட்டம் கட்ட வந்திருந்தார். நலமா என்றேன் ஆமாம் என்று உதடடைந்ததும், காற்று தான் வருகிறது. இருவருடம் முன்புவரை துரத்தித்துரத்தி இவரை அவம் செய்த முதுகிழ மேலாளரும் அதே தீவிற்கு டிக்கெட் எடுத்திருக்கிறார்.

அறிதுயில்

மற்றுமோர் மென் தூறல் ஞாயிற்றுப் பயணம். மணிமாறன், கடலூர் சீனு அண்ணா, திருமா அண்ணா நான் நால்வரும் எட்டு மணிக்கு மதகடிப்பட்டை தாண்டுகிறோம். சமீபத்தில் வீடு மாற்றி திருவாண்டார் கோவில் வந்துவிட்டேன். மணியும் சீனு அண்ணனும் வீட்டிற்கு இப்போதுதான் வருகிறார்கள் சீனு அண்ணனின் தாடிநீளத்தை பார்த்து கீழ்வீட்டு காளி மிரண்டு துள்ளி எனக்குப்பின்னால் ஒளிந்து கொண்டான். மாலை திரும்பும்போது போனில் சீனு மாமா என்று கொஞ்சிய கவினும் அதேபோல மிரண்டான். பயணம் செஞ்சியை மையமாகக்கொண்டு திட்டமிடப்பட்டது. வழிநெடுக சமணத் தடங்களை அறிவிக்கும் பலகைகள். விழுப்புரம் தாண்டும்போதுதான் முதலில் தளவானூர் செல்வதாக முடிவெடுத்தோம். நானும் தளவானூரை நேரடியாக பார்த்ததில்லை. மணிமாறனுடன் செய்யும் பயணங்களில் உணவு விஷயத்தில் நான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பேன் காலை உணவை ஆறுமணிக்கே வாங்கித்தந்துவிடுவான், மாலை ஆறுமணிக்கு. மாற்று சக்கரத்தில் காற்றில்லை என்று சாலப்பரிந்த புன்னகையோடு மணி சொல்லிக்கொண்டிருக்கும்போது செல்வழியில் ஒரு கடையில் நிறுத்தினோம், புகை கூரை மேலெழுந்து ஒரு கொடிபோல ஆடிக்கொண்டிருந்தது. எளிய சுவை மிகுந்த உணவு, நா...

ஜல்லிக்கட்டு பேரணி சென்னை

இன்று நடந்த ஜல்லிக்கட்டுக்கான பேரணி நிச்சயம் ஒரு பேரனுபவம் தான் . முதலில் இவ்வளவு கூட்டம் வரும் என்றே எதிர்பார்க்கவில்லை. கலங்கரை விளக்கில் சென்று வரிசையில் நின்றபோதே தன்னார்வலர்கள் வந்து பேரணி பற்றி விளக்கிவிட்டு என்ன செய்யவேண்டும் என்றும் சொன்னார்கள்.  அமைதியாக ஆரம்பித்த பேரணியில் முழக்கங்கள் தொடர்ந்து எழ ஆரம்பித்தது. பின் ஒரு ரிலே ரேஸ் போல முழக்கங்கள் முன்னிருந்து பின்னாக பற்றிக்கொள்ள ஆரம்பித்தது. அதிலும் எனக்குபின் நின்ற சகோதரிகள் பேரணி ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை முழக்கங்களை நிறுத்தவேயில்லை. “நடத்துவோண்டா ஜல்லிக்கட்டு தடையைத்தாண்டி துள்ளிக்கிட்டு” எல்லாம் அதில் ஒரு சோறு பதம்.  வந்திருந்தவர்களில் எண்பது சதத்திற்கும் மேல் இளையோர்கள். அதனாலேயே உற்சாகமும் உணர்வெழுச்சியும் அதிகமாக இருந்தது. வெவ்வேறு ஊர்க்காரர்கள், தானே பதாகைகள் தயாரித்து கொண்டுவந்திருந்தவர்கள், வேற்று மொழி சகோதரர்கள் , சில வெளிநாட்டுக்காரர்கள் கூட கலந்து கொண்டனர்.  கூட்டம் மெல்ல மெல்ல அதன் உச்ச கட்ட உணர்வெழுச்சிக்கு செல்கையிலே நடுவிலே வழி ஒதுக்கப்பட்டது,    அலங்கரிக்கப்பட்ட ஜல...