Skip to main content

திருவிழா .......



நண்பனின் ஊர்த்திருவிழாவிற்கு போயிருந்தேன் . புதுக்கோட்டை அருகே கீரமங்கலம் எனும் ஊர் . மாற்றங்கள்  இருந்தாலும் கிராமம் இன்னும் கிராமமாகவே இருக்கிறது.

எனது திருவிழா, காலையிலே துவங்கி விட்டது, குளத்தின் கரைகளின் வெப்பலில் பல பறவைகளும் பட்டாம்பூச்சிகளும் சுற்றி வந்தன .
பெய்த மழை அந்தப்பெருங்குளத்தில் சிறிதே தேங்கி இருந்தது .  நீர் ஆங்காங்கே ஓடைகளாக ஓடி கால் நனைத்துக் கொண்டிருந்தது. வெயில் வெறும் வெளிச்சமாகவே இருந்தது , கண்ணுக்குத்தெரியாத குளுமை எங்களை சூழ்ந்திருந்தது .  

வெப்பல் கரைகளில் நிறைய சிறு குருவிகளைப் பார்க்க முடிந்தது , ஆனால் அவை சிட்டுக்குருவிகள் அன்று.  வேகமாகவும் குழுவாக விதவிதமான வடிவங்களிலும் பறக்கும் தி க்ரூட்ஸ் படத்தில் வரும் குருவிகள் போலிருந்தன அவை.

இரவு மாரியம்மன் கோவில் திருவிழாவில் 'ஆடலும் பாடலும் ' நடந்தது.
மாரி அலங்காரியாக, பூக்களும் பட்டும் பரிவட்டமும்  சூடி சிங்கத்தின் மீதிருந்தாள். விழா மேடையில் நிலாக்காயுது ஓடிக்கொண்டிருந்தது, உச்சகட்டமாக  ஒரு பெண்ணை தூக்கிக்கட்டி அணைத்தார் மேடையின் ஹீரோ, நூற்றுக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் கிளர்ச்சியுறுவதை விசில் ஒலிகளுனூடே  உணர முடிந்தது . ஆயிரமாண்டுகளாக ஊரில் குடியிருக்கும்  மாரியும் ,ஒப்பனையில் ஒளிந்து கொள்ள முடியாத அந்த இரவு ஆட்டக்காரியும் ஒரே மஞ்சள் ஆடைதான் உடுத்தியிருந்தார்கள்.

பெண்கள் மாவிளக்கு ஏந்தி ஊர்வலம் வர, இளசுகள் அவர்களின் இருபுறமும் நகர்ந்து கொண்டிருந்தார்கள், தோழிகளிடம் கிண்டல்களோடும்  , தன் விருப்பமானவனிடம்  கண்களால் பேசிக்கொண்டும் நகர்ந்தது ஊர்வலம். விளக்குகளின் ஒளியை விஞ்சும் கண்கள், எந்தக்காலத்திலும் மனதில் நிற்கும் காட்சி.

 புதிதாக தாலிச்சரடு மின்னும் ஒருத்தியின் கண்கள் யாரையோ தேட, ஒரு இளந்தாரி, வெள்ளைச் சட்டையோடும் குனிந்த  தலையோடும் அவளைக் கடந்தான். அந்தச்சட்டையின் பாக்கெட்டுக்குள் அழகான காதல் ஒன்று  உயிர் பிழைத்து எட்டிப்பார்த்தது.

ஊர்வலத்தின் முன்னே அழகான ஐந்து வெள்ளைக்குதிரைகள் வந்தன . அவை நடனமாடும் என்றார்கள், குதிரை எப்படி ஆடும் என்றேன், அழகாக அலங்கரிக்கப்பட்ட குதிரைகள், முதுகில் வண்ணக்குஞ்சங்கள்.  தலையில் கொண்டையாக பலவண்ணங்களில் புசு புசுவென பெருநகரத்தின் கார் துடைப்பான்கள் , இதை விட ஒரு நகரவாசியை யாரும் கிண்டல் செய்ய முடியாது.

குதிரைப்பாகன்கள் (?!) குதிரையை உண்மையில் ஆடச்செய்தனர், தாளகதியில் கால்களை த்தூக்கி ஆடின தன கால்களின் வலிமையை மறந்து விட்ட பரிகள் .  உற்றுப்பார்த்தபின் தான்  தெரிந்தது அவர்கள் குதிரையின் அடிவயிற்றில் குத்துவதும் அவை துள்ளுவதும் , உச்சமாக குதிரை இரண்டு கால்களை மேலே தூக்கி அப்படியே பேலன்ஸ் செய்தது. இதற்கும் விசில்.

இது எல்லாம் தப்பில்லையா, அது பாவம் யாராவது விலங்கு ஆர்வலர்கள் பார்த்தா கேஸ் போட்டுருவாங்க என்றேன் என்னையறியாமல் , சுற்றி இருந்தவர்கள் என்னை முறைத்தது போல் இருந்தது.

ஊரில் இறங்கியதில் இருந்து அன்பு, செல்போன் சிக்னல் இல்லாமல் கஷ்டப்பட்டான். அடுத்ததடவை வரும்போது டவர் வச்சுருவாங்க சிக்னல் கிடைக்கும் என்றான், வெப்பலில் மிச்சமிருக்கும்  சிட்டுக்களும் அப்போது  இருக்காது என்று நினைத்துக்கொண்டேன்.




Comments

Popular posts from this blog

அறிதுயில்

மற்றுமோர் மென் தூறல் ஞாயிற்றுப் பயணம். மணிமாறன், கடலூர் சீனு அண்ணா, திருமா அண்ணா நான் நால்வரும் எட்டு மணிக்கு மதகடிப்பட்டை தாண்டுகிறோம். சமீபத்தில் வீடு மாற்றி திருவாண்டார் கோவில் வந்துவிட்டேன். மணியும் சீனு அண்ணனும் வீட்டிற்கு இப்போதுதான் வருகிறார்கள் சீனு அண்ணனின் தாடிநீளத்தை பார்த்து கீழ்வீட்டு காளி மிரண்டு துள்ளி எனக்குப்பின்னால் ஒளிந்து கொண்டான். மாலை திரும்பும்போது போனில் சீனு மாமா என்று கொஞ்சிய கவினும் அதேபோல மிரண்டான். பயணம் செஞ்சியை மையமாகக்கொண்டு திட்டமிடப்பட்டது. வழிநெடுக சமணத் தடங்களை அறிவிக்கும் பலகைகள். விழுப்புரம் தாண்டும்போதுதான் முதலில் தளவானூர் செல்வதாக முடிவெடுத்தோம். நானும் தளவானூரை நேரடியாக பார்த்ததில்லை. மணிமாறனுடன் செய்யும் பயணங்களில் உணவு விஷயத்தில் நான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பேன் காலை உணவை ஆறுமணிக்கே வாங்கித்தந்துவிடுவான், மாலை ஆறுமணிக்கு. மாற்று சக்கரத்தில் காற்றில்லை என்று சாலப்பரிந்த புன்னகையோடு மணி சொல்லிக்கொண்டிருக்கும்போது செல்வழியில் ஒரு கடையில் நிறுத்தினோம், புகை கூரை மேலெழுந்து ஒரு கொடிபோல ஆடிக்கொண்டிருந்தது. எளிய சுவை மிகுந்த உணவு, நா...

மீண்டும் சிறுபாணன்

 சிறுபாணாற்றுப்படை   குறித்த சிறுபதிவு ஒன்றை இட்டிருந்தேன். https://thamilpanan.blogspot.com/2019/06/blog-post_13.html  சில மாதங்கள் கழித்து எழுத்தாளர் விழுப்புரம் கோ.செங்குட்டுவன்  விரிவான பதிவு ஒன்றை முகநூலில் இட்டிருந்தார். அதை எனது கட்டுரையின் தேடல்களை எல்லாம் ஆற்றுப்படுத்துவதாகக் கண்டதால் இங்கு பதிவிடுகிறேன். தாமரைக்கண்ணன், புதுச்சேரி. 31.07.2019  ======================= எயிற்பட்டினம் என்னும் மரக்காணம்: ஆழ்கடலில் மூழ்கிய சங்ககாலத் துறைமுகத்தில் கடல்சார் ஆய்வுகள் - முத்துசாமி இரா.  மரக்காணம் (English: Marakkanam), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் பேரூராட்சியில் அமைந்திருந்த துறைமுகமும் நகர்ப்புற மையமுமாகும் (Seaport and Urban Center) (பின்கோடு 604303).  இந்நகரம் பண்டைக் காலத்திலிருந்து எயிற்பட்டினம் (Eyirpattinam), சோபட்டினம் (Sopattinam), சோபட்மா (Sopatma), மனக்கானம் (Manakkanam), போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. “மதிலொடு பெயரியப் பட்டினம்” என்று சிறுபாணாற்றுப்படை சுட்டும் இந்தச் சங...

ஜல்லிக்கட்டு பேரணி சென்னை

இன்று நடந்த ஜல்லிக்கட்டுக்கான பேரணி நிச்சயம் ஒரு பேரனுபவம் தான் . முதலில் இவ்வளவு கூட்டம் வரும் என்றே எதிர்பார்க்கவில்லை. கலங்கரை விளக்கில் சென்று வரிசையில் நின்றபோதே தன்னார்வலர்கள் வந்து பேரணி பற்றி விளக்கிவிட்டு என்ன செய்யவேண்டும் என்றும் சொன்னார்கள்.  அமைதியாக ஆரம்பித்த பேரணியில் முழக்கங்கள் தொடர்ந்து எழ ஆரம்பித்தது. பின் ஒரு ரிலே ரேஸ் போல முழக்கங்கள் முன்னிருந்து பின்னாக பற்றிக்கொள்ள ஆரம்பித்தது. அதிலும் எனக்குபின் நின்ற சகோதரிகள் பேரணி ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை முழக்கங்களை நிறுத்தவேயில்லை. “நடத்துவோண்டா ஜல்லிக்கட்டு தடையைத்தாண்டி துள்ளிக்கிட்டு” எல்லாம் அதில் ஒரு சோறு பதம்.  வந்திருந்தவர்களில் எண்பது சதத்திற்கும் மேல் இளையோர்கள். அதனாலேயே உற்சாகமும் உணர்வெழுச்சியும் அதிகமாக இருந்தது. வெவ்வேறு ஊர்க்காரர்கள், தானே பதாகைகள் தயாரித்து கொண்டுவந்திருந்தவர்கள், வேற்று மொழி சகோதரர்கள் , சில வெளிநாட்டுக்காரர்கள் கூட கலந்து கொண்டனர்.  கூட்டம் மெல்ல மெல்ல அதன் உச்ச கட்ட உணர்வெழுச்சிக்கு செல்கையிலே நடுவிலே வழி ஒதுக்கப்பட்டது,    அலங்கரிக்கப்பட்ட ஜல...