ராஜவனம் - ராம் தங்கம்
திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்பு எழுதிய எழுத்தாளர் ராம் தங்கத்தின் அடுத்த படைப்பு ராஜவனம்
என்னும் எழுபது பக்க அளவிலான குறுநாவல். நாவலின் சிறப்பு அதன் சொற்கச்சிதம், அதுதான் இந்த சிறிய நாவலில், ஒரு நிலத்தின் இயல்பு, சூழியல், அரசியல் அனைத்தையும் செறிவாகக் கொண்டுவர உதவியிருக்கிறது. இந்த வடிவத்தை தெரிவு செய்ததற்காக ஆசிரியரை தனியே பாராட்டவேண்டும்.
விவரிப்பினூடாக ஒரு வனத்தில் உங்களை புகுத்திவிடுவதுதான் நாவலின் அழகு, சங்கஇலக்கியத்தில் சிலபாடல்களில் இந்த மாயம் நிகழும் , நீங்கள் வார்த்தைகளூடே ஒரு பாலையிலோ, சுனைக்கரையிலோ நின்று கொண்டிருப்பீர்கள்...உள்ளே உறங்கும் ஏதோ ஒன்று வனத்தில் நம்மை அதிசுதந்திரர்களாக்கி விடுகிறது. எது நம்மை அங்கு பிணைத்திருக்கிறது என்பது அது அறியும்போலும். நாவலில் காடு ஒரு தகப்பனின் நினைவுகளூடே விரிகிறது, ஒரு மகனின் பயணத்தில் எதிர்பாராது வரும் வன்விலங்கு அவனுக்கு அவன் மேலும் அறிந்துகொள்ளத்தக்க ஒரு தகப்பனைக் காட்டிச்செல்லும்.
வனத்தின் புல்லையும், மூங்கிலையும், வண்ணத்துப்பூச்சியையும், பறவையையும் பெயரோடு சுட்டும் ராம் தங்கம், காணிகளின் அடுப்பு நீரில் கொதிக்கும் தழைகளையும் சொல்கிறார். தகவல் செறிவால் குமரி வனத்தின் காடுபற்றிய ஒரு அழகிய ஆவணமாகவும் இது அமைந்திருக்கிறது. புனைவும் தரவுகளும் பிணைந்த இந்த தன்மை படைப்பில் இயல்பாகவே பொருந்தியிருக்கிறது.
காட்டின் மீது காதலுள்ள யாரும் வாசிக்கவேண்டிய நூல், அப்படி இல்லையெனில் வாசித்தபின் அந்த வனத்தை காதலிக்கத்துவங்குவீர்கள். குமரி மாவட்ட நந்தியாற்றின் பிறப்பிடத்தை நாமும் பார்த்து வரலாம், வாருங்கள்.
தாமரைக்கண்ணன்
புதுச்சேரி
11.03.2021
நிறுவனத்தில் மேலாளர் ஸ்ரீக்கு பதவி உயர்வோடு நீர்சூழ் தீவாந்திர சிட்சை அளித்திருக்கிறார்கள். அக்கணம் மணமருள் பெருமானை துதித்தபடி அனைத்தையும் கைவிட்டு விட்டு நீங்கிவிட்டார். ஒருவாரம் கழித்து பார்த்தேன், பின் அழகிய சிங்கர் ஒருவருக்கு பரிவட்டம் கட்ட வந்திருந்தார். நலமா என்றேன் ஆமாம் என்று உதடடைந்ததும், காற்று தான் வருகிறது. இருவருடம் முன்புவரை துரத்தித்துரத்தி இவரை அவம் செய்த முதுகிழ மேலாளரும் அதே தீவிற்கு டிக்கெட் எடுத்திருக்கிறார்.

Comments
Post a Comment