Skip to main content

மனங்களில் மனிதம் மலர்ந்த 2015

மனங்களில் மனிதம் மலர்ந்த 2015 




இந்த வருடத்தில் எத்தனையோ நிகழ்வுகள் , எல்லாம் கடந்து கண்ணை மூடினால் நினைவில் நிற்பது இரண்டுதான் .

மக்கள் தங்கள் மீதான நெகடிவ் பிம்பங்களை எல்லாம் உடைத்தெறிந்த கணங்கள் அவை.

மனிதம் மனிதம் மனிதம் மட்டுமே தரிசித்த கணங்கள் அவை.
தெய்வம் என்ற ஒன்றை  சகமனிதனிடம்  நேரில் கண்ட வருடம் இது.
எத்தனை வருடம் கடந்தாலும் இது நெஞ்சில் நிற்கும்.

அப்துல் கலாம் என்ற மாமனிதர் மறைந்தார்.

இங்கு எத்தனையோ பிறர்  இறந்த போதும் , இனி இறக்கும் போதும் இப்படி ஒரு பெருமை கிடைக்குமா தெரியாது . பரந்த பாரதமெங்கும் இன மத மொழி கட்சி ஜாதி எல்லாம் எல்லாம்  கடந்து மனிதர்கள்  கண்ணீர்  உகுத்தது  நம் வாழ்நாளில் நாம்  காணாதது .

ஒவ்வொரு வீட்டிலும் துக்கம் சூழ்ந்தது , எதோ தன்  சொந்தம் ஒன்று பிரிந்ததாகவே ஒவ்வொருவரும் நினைக்கத்தோன்றியது.

அரசியல் கட்சிகள் அச்சுறுத்த வில்லை , பேனர் வைக்க யாரும் வற்புறுத்த வில்லை ,  பணம் வசூலிக்க வில்லை, பேருந்துகள் நிறுத்தப்படவில்லை ,

தாமாகவே முன்வந்து மக்கள் ஊருக்கு ஊர் பேனர் வைத்தனர் , இரங்கல் கூட்டம் நடத்தினர் . குழந்தைகள் இளையோர்கள் யாவரும் அஞ்சலி செலுத்தினர் . பேய்க்கரும்புக்கு இலவசமாக ஆட்டோ ஓட்டி தன ஆதங்கத்தை வெளிப்படுத்தினான் ஒரு சகோதரன்.

கனவுகளை விதைத்து விதைத்து களைத்த ஒரு மனிதன், என்ன சம்பாதித்து வைத்திருந்தான்  என்று அன்று நாடே பார்த்தது ....!

சென்னை பெருமழை !

கையசைத்தால்  கால் டாக்சி , ஸ்மார்ட் போனை விரல்பதித்தால் சகலமும் கிடைக்கும் என்று நாம் கட்டிவைத்த ஒரு மாய மாளிகையை பார்த்து  இயற்கை  லேசாக சுண்டி விட்டது.

பெய்தது பெருமழை , தண்ணீர் லாரிகளுக்கு காத்திருந்த தெருக்களில் எல்லாம் வெள்ளம் சூழ்ந்தது .

ஒரு தலைமுறையின்  உழைப்பை எல்லாம்  ஒரு நாள் மழை அடித்துச்சென்றது .

பல அரசியல் சமூக பிரபலங்களின் சாயங்களை வெளுக்க வைத்தது மழை.

சொந்த வீடுகளில் நீரால் சிறை வைக்கப்பட்டனர் மக்கள், வீடில்லாதவர்களின் கதி இன்னும் என்ன என்று நமக்கு தெரியாது.

ஆறுதல் சொல்ல , அழுகையை துடைக்க ஆயிரம் ஆயிரம் கைகள் நீண்டன.

யார் அவர்கள் அவர்களின் முகம் நமக்குத்தெரியாது, அதை பற்றி அவர்கள் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. சக மனிதனின் துன்பம் கண்டு தானாக எழுந்து வந்த நண்பர்கள்   டார்வினின் சித்தாந்தங்களை கொஞ்சம் அசைத்துப்பார்த்தார்கள்.

உதவுதல் இயல்பான மனித குணம் என்றே உறுதி செய்தார்கள்.

தலைவன் என்று சொல்லிக்கொண்ட பலரின் முகத்தில் விழுந்த சவுக்கடி இந்த பலன் பாராத உதவி .

இடுப்பளவு நீரில் , கழுத்தளவு நீரில் நீந்திப்போய் உதவினார்கள் , இத்தனை நாள் நம்மால் திட்டப்பட ஐ டி  இளைஞர்கள் , கையாலாகாதவர்கள் என முத்திரை குத்தப்பட்ட இளைஞர்கள், சமூக வலைதளங்களில் வாழ்பவர்கள் என நாம் குறைகூறியவர்கள் எல்லாம் புன்னகையோடு உதவினார்கள்.

அரசாங்கம் வரவில்லை, எம் எல் ஏ வரவில்லை ,  கவுன்சிலர் வரவில்லை ,
கட்சிக்காரன் வரவில்லை வந்தது நம் சகோதரன் . இது தான் நிஜம் , இது தான் நிதர்சனம்.

மக்களுக்காக உதவி செய்த தன்னார்வலர் ஒவ்வொருவரும் மதிக்கத்தக்கவர்கள், விலை மதிப்பில்லாதவர்கள் .....!





Comments

Popular posts from this blog

வலியது

நிறுவனத்தில் மேலாளர் ஸ்ரீக்கு பதவி உயர்வோடு நீர்சூழ் தீவாந்திர சிட்சை அளித்திருக்கிறார்கள். அக்கணம் மணமருள் பெருமானை துதித்தபடி அனைத்தையும் கைவிட்டு விட்டு நீங்கிவிட்டார். ஒருவாரம் கழித்து பார்த்தேன், பின் அழகிய சிங்கர் ஒருவருக்கு பரிவட்டம் கட்ட வந்திருந்தார். நலமா என்றேன் ஆமாம் என்று உதடடைந்ததும், காற்று தான் வருகிறது. இருவருடம் முன்புவரை துரத்தித்துரத்தி இவரை அவம் செய்த முதுகிழ மேலாளரும் அதே தீவிற்கு டிக்கெட் எடுத்திருக்கிறார்.

அறிதுயில்

மற்றுமோர் மென் தூறல் ஞாயிற்றுப் பயணம். மணிமாறன், கடலூர் சீனு அண்ணா, திருமா அண்ணா நான் நால்வரும் எட்டு மணிக்கு மதகடிப்பட்டை தாண்டுகிறோம். சமீபத்தில் வீடு மாற்றி திருவாண்டார் கோவில் வந்துவிட்டேன். மணியும் சீனு அண்ணனும் வீட்டிற்கு இப்போதுதான் வருகிறார்கள் சீனு அண்ணனின் தாடிநீளத்தை பார்த்து கீழ்வீட்டு காளி மிரண்டு துள்ளி எனக்குப்பின்னால் ஒளிந்து கொண்டான். மாலை திரும்பும்போது போனில் சீனு மாமா என்று கொஞ்சிய கவினும் அதேபோல மிரண்டான். பயணம் செஞ்சியை மையமாகக்கொண்டு திட்டமிடப்பட்டது. வழிநெடுக சமணத் தடங்களை அறிவிக்கும் பலகைகள். விழுப்புரம் தாண்டும்போதுதான் முதலில் தளவானூர் செல்வதாக முடிவெடுத்தோம். நானும் தளவானூரை நேரடியாக பார்த்ததில்லை. மணிமாறனுடன் செய்யும் பயணங்களில் உணவு விஷயத்தில் நான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பேன் காலை உணவை ஆறுமணிக்கே வாங்கித்தந்துவிடுவான், மாலை ஆறுமணிக்கு. மாற்று சக்கரத்தில் காற்றில்லை என்று சாலப்பரிந்த புன்னகையோடு மணி சொல்லிக்கொண்டிருக்கும்போது செல்வழியில் ஒரு கடையில் நிறுத்தினோம், புகை கூரை மேலெழுந்து ஒரு கொடிபோல ஆடிக்கொண்டிருந்தது. எளிய சுவை மிகுந்த உணவு, நா...

ஜல்லிக்கட்டு பேரணி சென்னை

இன்று நடந்த ஜல்லிக்கட்டுக்கான பேரணி நிச்சயம் ஒரு பேரனுபவம் தான் . முதலில் இவ்வளவு கூட்டம் வரும் என்றே எதிர்பார்க்கவில்லை. கலங்கரை விளக்கில் சென்று வரிசையில் நின்றபோதே தன்னார்வலர்கள் வந்து பேரணி பற்றி விளக்கிவிட்டு என்ன செய்யவேண்டும் என்றும் சொன்னார்கள்.  அமைதியாக ஆரம்பித்த பேரணியில் முழக்கங்கள் தொடர்ந்து எழ ஆரம்பித்தது. பின் ஒரு ரிலே ரேஸ் போல முழக்கங்கள் முன்னிருந்து பின்னாக பற்றிக்கொள்ள ஆரம்பித்தது. அதிலும் எனக்குபின் நின்ற சகோதரிகள் பேரணி ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை முழக்கங்களை நிறுத்தவேயில்லை. “நடத்துவோண்டா ஜல்லிக்கட்டு தடையைத்தாண்டி துள்ளிக்கிட்டு” எல்லாம் அதில் ஒரு சோறு பதம்.  வந்திருந்தவர்களில் எண்பது சதத்திற்கும் மேல் இளையோர்கள். அதனாலேயே உற்சாகமும் உணர்வெழுச்சியும் அதிகமாக இருந்தது. வெவ்வேறு ஊர்க்காரர்கள், தானே பதாகைகள் தயாரித்து கொண்டுவந்திருந்தவர்கள், வேற்று மொழி சகோதரர்கள் , சில வெளிநாட்டுக்காரர்கள் கூட கலந்து கொண்டனர்.  கூட்டம் மெல்ல மெல்ல அதன் உச்ச கட்ட உணர்வெழுச்சிக்கு செல்கையிலே நடுவிலே வழி ஒதுக்கப்பட்டது,    அலங்கரிக்கப்பட்ட ஜல...