Skip to main content

மனங்களில் மனிதம் மலர்ந்த 2015

மனங்களில் மனிதம் மலர்ந்த 2015 




இந்த வருடத்தில் எத்தனையோ நிகழ்வுகள் , எல்லாம் கடந்து கண்ணை மூடினால் நினைவில் நிற்பது இரண்டுதான் .

மக்கள் தங்கள் மீதான நெகடிவ் பிம்பங்களை எல்லாம் உடைத்தெறிந்த கணங்கள் அவை.

மனிதம் மனிதம் மனிதம் மட்டுமே தரிசித்த கணங்கள் அவை.
தெய்வம் என்ற ஒன்றை  சகமனிதனிடம்  நேரில் கண்ட வருடம் இது.
எத்தனை வருடம் கடந்தாலும் இது நெஞ்சில் நிற்கும்.

அப்துல் கலாம் என்ற மாமனிதர் மறைந்தார்.

இங்கு எத்தனையோ பிறர்  இறந்த போதும் , இனி இறக்கும் போதும் இப்படி ஒரு பெருமை கிடைக்குமா தெரியாது . பரந்த பாரதமெங்கும் இன மத மொழி கட்சி ஜாதி எல்லாம் எல்லாம்  கடந்து மனிதர்கள்  கண்ணீர்  உகுத்தது  நம் வாழ்நாளில் நாம்  காணாதது .

ஒவ்வொரு வீட்டிலும் துக்கம் சூழ்ந்தது , எதோ தன்  சொந்தம் ஒன்று பிரிந்ததாகவே ஒவ்வொருவரும் நினைக்கத்தோன்றியது.

அரசியல் கட்சிகள் அச்சுறுத்த வில்லை , பேனர் வைக்க யாரும் வற்புறுத்த வில்லை ,  பணம் வசூலிக்க வில்லை, பேருந்துகள் நிறுத்தப்படவில்லை ,

தாமாகவே முன்வந்து மக்கள் ஊருக்கு ஊர் பேனர் வைத்தனர் , இரங்கல் கூட்டம் நடத்தினர் . குழந்தைகள் இளையோர்கள் யாவரும் அஞ்சலி செலுத்தினர் . பேய்க்கரும்புக்கு இலவசமாக ஆட்டோ ஓட்டி தன ஆதங்கத்தை வெளிப்படுத்தினான் ஒரு சகோதரன்.

கனவுகளை விதைத்து விதைத்து களைத்த ஒரு மனிதன், என்ன சம்பாதித்து வைத்திருந்தான்  என்று அன்று நாடே பார்த்தது ....!

சென்னை பெருமழை !

கையசைத்தால்  கால் டாக்சி , ஸ்மார்ட் போனை விரல்பதித்தால் சகலமும் கிடைக்கும் என்று நாம் கட்டிவைத்த ஒரு மாய மாளிகையை பார்த்து  இயற்கை  லேசாக சுண்டி விட்டது.

பெய்தது பெருமழை , தண்ணீர் லாரிகளுக்கு காத்திருந்த தெருக்களில் எல்லாம் வெள்ளம் சூழ்ந்தது .

ஒரு தலைமுறையின்  உழைப்பை எல்லாம்  ஒரு நாள் மழை அடித்துச்சென்றது .

பல அரசியல் சமூக பிரபலங்களின் சாயங்களை வெளுக்க வைத்தது மழை.

சொந்த வீடுகளில் நீரால் சிறை வைக்கப்பட்டனர் மக்கள், வீடில்லாதவர்களின் கதி இன்னும் என்ன என்று நமக்கு தெரியாது.

ஆறுதல் சொல்ல , அழுகையை துடைக்க ஆயிரம் ஆயிரம் கைகள் நீண்டன.

யார் அவர்கள் அவர்களின் முகம் நமக்குத்தெரியாது, அதை பற்றி அவர்கள் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. சக மனிதனின் துன்பம் கண்டு தானாக எழுந்து வந்த நண்பர்கள்   டார்வினின் சித்தாந்தங்களை கொஞ்சம் அசைத்துப்பார்த்தார்கள்.

உதவுதல் இயல்பான மனித குணம் என்றே உறுதி செய்தார்கள்.

தலைவன் என்று சொல்லிக்கொண்ட பலரின் முகத்தில் விழுந்த சவுக்கடி இந்த பலன் பாராத உதவி .

இடுப்பளவு நீரில் , கழுத்தளவு நீரில் நீந்திப்போய் உதவினார்கள் , இத்தனை நாள் நம்மால் திட்டப்பட ஐ டி  இளைஞர்கள் , கையாலாகாதவர்கள் என முத்திரை குத்தப்பட்ட இளைஞர்கள், சமூக வலைதளங்களில் வாழ்பவர்கள் என நாம் குறைகூறியவர்கள் எல்லாம் புன்னகையோடு உதவினார்கள்.

அரசாங்கம் வரவில்லை, எம் எல் ஏ வரவில்லை ,  கவுன்சிலர் வரவில்லை ,
கட்சிக்காரன் வரவில்லை வந்தது நம் சகோதரன் . இது தான் நிஜம் , இது தான் நிதர்சனம்.

மக்களுக்காக உதவி செய்த தன்னார்வலர் ஒவ்வொருவரும் மதிக்கத்தக்கவர்கள், விலை மதிப்பில்லாதவர்கள் .....!





Comments

Popular posts from this blog

மரபுப் பயணம்

புதுவையின் நுழைவாயிலான மதகடிப்பட்டு கடந்த ஞாயிறு (1.4.18) அன்று தமிழகத்தின் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த சரித்திர ஆர்வலர்களை வரவேற்கும் இடமாக ஆகியிருந்தது. சோழர் வரலாற்று ஆய்வு சங்கம் ஒருங்கிணைத்திருந்த மரபுநடை அங்கிருந்துதான் துவங்கியது. புதுவை கடலூர் விழுப்புரம் அன்பர்கள் அன்றியும் சேலம் பெரம்பலூர் வேலூர் நண்பர்களும் சென்னைவாசிகளாக மாறிவிட்ட பல்லூர்க்காரர்களும் குழுமியிருந்தனர்.  ஜெயங்கொண்ட சோழமண்டலம், திரிபுவனமாதேவி சதுர்வேதிமங்கலத்தின் ஒருபகுதியான குந்தாங்குழி மகாதேவர் கோவிலில் இருந்து துவங்கினோம். பூவுதிரும் அசோக மரத்தடியில் இருந்து எழுபதே வயதேயான பேரிளைஞரான திரு வீரராகவன் எங்கள் கைபற்றி சோழர் காலத்துக்குள் கூட்டிச்சென்றார். சோழர்கால கோவில்கள், கல்வெட்டுகளில் குறிக்கப்பட்ட நிவந்தங்கள், நிவந்தங்களின் வகைகள், சோழர் கல்வெட்டுக்கும், பல்லவர் கல்வெட்டுக்குமான துவக்க வரிகள் என கடைசியிருக்கை எம்மனோர்க்கு எளிதில் விளங்காதவற்றை எளிமையாக விளக்கி  சொன்னார். அவரது பேச்சு கொண்டுசெல்லும் வழியெங்கும் நிரம்பி உதிரும் பூக்கூடை போல இருந்தது, அவரிடமிருந்து வரலாற்றுத்தகவல்கள் வந்து விழுந்து

மீண்டும் சிறுபாணன்

 சிறுபாணாற்றுப்படை   குறித்த சிறுபதிவு ஒன்றை இட்டிருந்தேன். https://thamilpanan.blogspot.com/2019/06/blog-post_13.html  சில மாதங்கள் கழித்து எழுத்தாளர் விழுப்புரம் கோ.செங்குட்டுவன்  விரிவான பதிவு ஒன்றை முகநூலில் இட்டிருந்தார். அதை எனது கட்டுரையின் தேடல்களை எல்லாம் ஆற்றுப்படுத்துவதாகக் கண்டதால் இங்கு பதிவிடுகிறேன். தாமரைக்கண்ணன், புதுச்சேரி. 31.07.2019  ======================= எயிற்பட்டினம் என்னும் மரக்காணம்: ஆழ்கடலில் மூழ்கிய சங்ககாலத் துறைமுகத்தில் கடல்சார் ஆய்வுகள் - முத்துசாமி இரா.  மரக்காணம் (English: Marakkanam), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் பேரூராட்சியில் அமைந்திருந்த துறைமுகமும் நகர்ப்புற மையமுமாகும் (Seaport and Urban Center) (பின்கோடு 604303).  இந்நகரம் பண்டைக் காலத்திலிருந்து எயிற்பட்டினம் (Eyirpattinam), சோபட்டினம் (Sopattinam), சோபட்மா (Sopatma), மனக்கானம் (Manakkanam), போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. “மதிலொடு பெயரியப் பட்டினம்” என்று சிறுபாணாற்றுப்படை சுட்டும் இந்தச் சங்ககாலத் துறைமுகப் பட்டணம் பாலாறு

சங்கப்பாடல்கள் வாசிப்பு - நற்றிணை 1

சங்கப்பாடல்கள் வாசிப்பு என்பது எனக்கு நான் விடுத்துக்கொள்ளும் பெரிய சவால், ஒவ்வொரு பாடலின் நயம் உணர்ந்து படித்து அதை தொகுத்துக்கொள்வது என்பது குறுகிய நேரத்தில் அடையப்படுவதல்ல, விரைவு எனும் சொல்லை இங்கு கைக்கொண்டால் அதன் அழகை முழுதும் அறிய முயலாமையாகப் போய்விடும், வாசிப்பு மனம் அதை பற்றிக்கொள்ளவேண்டும், எனவே தினம் ஒரு பாடல் அல்லது இரு பாடல்கள் மட்டும் என வரையறை செய்த்து கொள்கிறேன். நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் முதலில் வைக்கப்படுவது, அகத்துறையைச்சார்ந்த நானூறு பாக்களால் ஆனது, ஐந்திணைகளிலும் பாடல்கள் உள்ளன. 1915 ல் பின்னத்தூர் நாராயணசாமி அய்யரால் முதலில் பதிப்பிக்கப்பட்டது. முதல்பாடல் குறிஞ்சித்திணை சார்ந்தது நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர் என்றும் என் தோள் பிரிபு அறியலரே தாமரை தண் தாது ஊதி மீமிசை சாந்தில் தொடுத்த தீம் தேன் போல புரைய மன்ற புரையோர் கேண்மை நீர் இன்று அமையா உலகம் போல தம் இன்று அமையா நம் நயந்து அருளி நறு நுதல் பசத்தல் அஞ்சி சிறுமை உறுபவோ செய்பு அறியலரே இது பிரிவு உணர்த்திய தோழிக்கு தலைவி சொல்லியது. நான் விரும்பும் ஆண், சொன்ன சொல் தவறாதவன், நீண்ட காலமாகப் பழகுவதற்கு இனி