Skip to main content

மாமழை



எழுத்தாளர் ஜெயமோகன் எழுதும் வெண்முரசு நூல்வரிசையில் இரண்டாம் நூலான மழைப்பாடல் பற்றி ஈரோட்டில் ஒருமுறை பேசினேன். அதற்காக எழுதத்துவங்கிய குறிப்பு. ஆனால் இதைப்பேச வில்லை. என்றேனும் இதைப் பின்பற்றி எழுதலாம்.

மாமழை

நீள்விசும்பு தன் அருளை ஒரு துளி மண்ணிற்கு அளித்து உயிர்க்குவை யாவையும் முகிழ்க்கச்செய்கிறது. அவ்விண் துளி வேண்டி, வெடித்து வரியோடிய நிலத்தின் இடுக்குகளின் உள்ளிருந்து வித்துக்கள் யாவும்  மொத்த வானத்தையும் குடித்துவிடும் விடாய் கொண்டு உயிர் உயிர் என ஓட்டுக்குள் தீராத்தவம் செய்கின்றன. தன் வஞ்சத்தை எதிராளியிடம் காட்டாது கரப்பவன் போல் இருண்மை கொண்டு வானைமூடும் முகில்களிடையே மின் என வெட்டி அதிர்கிறது மெய்ப்பொருள். தொலைந்த பிள்ளையை கூட்டத்தில் தேடுபவன் விழியென பெருநிலம் யாவையும் பரிதவிப்போடு தழுவிக்கொள்கிறது மாமழை.

முதலில் அது மணமென எழுந்து நாசி வழியே உள்ளுடலை விழிக்கச்செய்கிறது. மென்காற்றெனத்தழுவி குளிரை ஏற்றி மயிர் கூச்சரியச்செய்கிறது, உள்ளோடும் குருதியின் வெம்மையை கூரான துளிகளால் உணர்த்தி உடெலெங்கும் பரவச்செய்கிறது. உள்வெம்மையை உணருந்தோரும் தன் உடலின் திண்மையையும், காற்று மேலிட அலைகளாகி வந்தறைந்து கூசி நடுங்கச்செய்யும் போதெல்லாம் பிள்ளைப்பிராயத்தின் நொய்மையையும் அறியச்செய்கிறது. எதிர்நிற்பவனின் முழுக்கவனத்தையும் தன்னகத்தே திருப்பும் குழந்தை அல்லவா மழை. விண்ணையும் மண்ணையும் இணைக்கும் அலகிலா சரங்கள் ஒவ்வொன்றிலும் புவிலுள்ள ஒவ்வோர் அணுவுக்கும் விண்ணிலிருந்து விழி விழி எனும் செய்தி வந்து கொண்டேயிருக்கிறது.

புவியில் அனைத்தையும் பருப்பொருளாக கண்டு அறியும் அறிவுக்கெட்டாததாய் ஏழ்வானுக்கு அப்பால் எங்கோ இருக்கிறது வித்து உயிர் கொள்ளும் ரகசியம். இருக்கிறேன் என்னும் உணர்வுக்கும் முந்தையது அது. தேர்ந்த கருமான் ஒருவன் இதுவே அது என தன் பெட்டியிலிருந்து ஓர் திருகாணியை எடுத்து பொருத்துவது போல்  ஒவ்வோர் வடிவத்துக்குள்ளும் உயிரை வைத்து அனுப்பும் இறைவனது முகங்களில் உறையும் களிப்பே  அந்த உயிரனலை எழுப்பும் உலைத்துருத்திக்காற்று என்க.

தாமரைக்கண்ணன்
புதுச்சேரி 
07.08.2019

Comments

Popular posts from this blog

மரபுப் பயணம்

புதுவையின் நுழைவாயிலான மதகடிப்பட்டு கடந்த ஞாயிறு (1.4.18) அன்று தமிழகத்தின் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த சரித்திர ஆர்வலர்களை வரவேற்கும் இடமாக ஆகியிருந்தது. சோழர் வரலாற்று ஆய்வு சங்கம் ஒருங்கிணைத்திருந்த மரபுநடை அங்கிருந்துதான் துவங்கியது. புதுவை கடலூர் விழுப்புரம் அன்பர்கள் அன்றியும் சேலம் பெரம்பலூர் வேலூர் நண்பர்களும் சென்னைவாசிகளாக மாறிவிட்ட பல்லூர்க்காரர்களும் குழுமியிருந்தனர்.  ஜெயங்கொண்ட சோழமண்டலம், திரிபுவனமாதேவி சதுர்வேதிமங்கலத்தின் ஒருபகுதியான குந்தாங்குழி மகாதேவர் கோவிலில் இருந்து துவங்கினோம். பூவுதிரும் அசோக மரத்தடியில் இருந்து எழுபதே வயதேயான பேரிளைஞரான திரு வீரராகவன் எங்கள் கைபற்றி சோழர் காலத்துக்குள் கூட்டிச்சென்றார். சோழர்கால கோவில்கள், கல்வெட்டுகளில் குறிக்கப்பட்ட நிவந்தங்கள், நிவந்தங்களின் வகைகள், சோழர் கல்வெட்டுக்கும், பல்லவர் கல்வெட்டுக்குமான துவக்க வரிகள் என கடைசியிருக்கை எம்மனோர்க்கு எளிதில் விளங்காதவற்றை எளிமையாக விளக்கி  சொன்னார். அவரது பேச்சு கொண்டுசெல்லும் வழியெங்கும் நிரம்பி உதிரும் பூக்கூடை போல இருந்தது, அவரிடமிருந்து வரலாற்றுத்தகவல்கள் வந்து விழுந்து

மீண்டும் சிறுபாணன்

 சிறுபாணாற்றுப்படை   குறித்த சிறுபதிவு ஒன்றை இட்டிருந்தேன். https://thamilpanan.blogspot.com/2019/06/blog-post_13.html  சில மாதங்கள் கழித்து எழுத்தாளர் விழுப்புரம் கோ.செங்குட்டுவன்  விரிவான பதிவு ஒன்றை முகநூலில் இட்டிருந்தார். அதை எனது கட்டுரையின் தேடல்களை எல்லாம் ஆற்றுப்படுத்துவதாகக் கண்டதால் இங்கு பதிவிடுகிறேன். தாமரைக்கண்ணன், புதுச்சேரி. 31.07.2019  ======================= எயிற்பட்டினம் என்னும் மரக்காணம்: ஆழ்கடலில் மூழ்கிய சங்ககாலத் துறைமுகத்தில் கடல்சார் ஆய்வுகள் - முத்துசாமி இரா.  மரக்காணம் (English: Marakkanam), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் பேரூராட்சியில் அமைந்திருந்த துறைமுகமும் நகர்ப்புற மையமுமாகும் (Seaport and Urban Center) (பின்கோடு 604303).  இந்நகரம் பண்டைக் காலத்திலிருந்து எயிற்பட்டினம் (Eyirpattinam), சோபட்டினம் (Sopattinam), சோபட்மா (Sopatma), மனக்கானம் (Manakkanam), போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. “மதிலொடு பெயரியப் பட்டினம்” என்று சிறுபாணாற்றுப்படை சுட்டும் இந்தச் சங்ககாலத் துறைமுகப் பட்டணம் பாலாறு

சங்கப்பாடல்கள் வாசிப்பு - நற்றிணை 1

சங்கப்பாடல்கள் வாசிப்பு என்பது எனக்கு நான் விடுத்துக்கொள்ளும் பெரிய சவால், ஒவ்வொரு பாடலின் நயம் உணர்ந்து படித்து அதை தொகுத்துக்கொள்வது என்பது குறுகிய நேரத்தில் அடையப்படுவதல்ல, விரைவு எனும் சொல்லை இங்கு கைக்கொண்டால் அதன் அழகை முழுதும் அறிய முயலாமையாகப் போய்விடும், வாசிப்பு மனம் அதை பற்றிக்கொள்ளவேண்டும், எனவே தினம் ஒரு பாடல் அல்லது இரு பாடல்கள் மட்டும் என வரையறை செய்த்து கொள்கிறேன். நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் முதலில் வைக்கப்படுவது, அகத்துறையைச்சார்ந்த நானூறு பாக்களால் ஆனது, ஐந்திணைகளிலும் பாடல்கள் உள்ளன. 1915 ல் பின்னத்தூர் நாராயணசாமி அய்யரால் முதலில் பதிப்பிக்கப்பட்டது. முதல்பாடல் குறிஞ்சித்திணை சார்ந்தது நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர் என்றும் என் தோள் பிரிபு அறியலரே தாமரை தண் தாது ஊதி மீமிசை சாந்தில் தொடுத்த தீம் தேன் போல புரைய மன்ற புரையோர் கேண்மை நீர் இன்று அமையா உலகம் போல தம் இன்று அமையா நம் நயந்து அருளி நறு நுதல் பசத்தல் அஞ்சி சிறுமை உறுபவோ செய்பு அறியலரே இது பிரிவு உணர்த்திய தோழிக்கு தலைவி சொல்லியது. நான் விரும்பும் ஆண், சொன்ன சொல் தவறாதவன், நீண்ட காலமாகப் பழகுவதற்கு இனி