Skip to main content

மாமழை



எழுத்தாளர் ஜெயமோகன் எழுதும் வெண்முரசு நூல்வரிசையில் இரண்டாம் நூலான மழைப்பாடல் பற்றி ஈரோட்டில் ஒருமுறை பேசினேன். அதற்காக எழுதத்துவங்கிய குறிப்பு. ஆனால் இதைப்பேச வில்லை. என்றேனும் இதைப் பின்பற்றி எழுதலாம்.

மாமழை

நீள்விசும்பு தன் அருளை ஒரு துளி மண்ணிற்கு அளித்து உயிர்க்குவை யாவையும் முகிழ்க்கச்செய்கிறது. அவ்விண் துளி வேண்டி, வெடித்து வரியோடிய நிலத்தின் இடுக்குகளின் உள்ளிருந்து வித்துக்கள் யாவும்  மொத்த வானத்தையும் குடித்துவிடும் விடாய் கொண்டு உயிர் உயிர் என ஓட்டுக்குள் தீராத்தவம் செய்கின்றன. தன் வஞ்சத்தை எதிராளியிடம் காட்டாது கரப்பவன் போல் இருண்மை கொண்டு வானைமூடும் முகில்களிடையே மின் என வெட்டி அதிர்கிறது மெய்ப்பொருள். தொலைந்த பிள்ளையை கூட்டத்தில் தேடுபவன் விழியென பெருநிலம் யாவையும் பரிதவிப்போடு தழுவிக்கொள்கிறது மாமழை.

முதலில் அது மணமென எழுந்து நாசி வழியே உள்ளுடலை விழிக்கச்செய்கிறது. மென்காற்றெனத்தழுவி குளிரை ஏற்றி மயிர் கூச்சரியச்செய்கிறது, உள்ளோடும் குருதியின் வெம்மையை கூரான துளிகளால் உணர்த்தி உடெலெங்கும் பரவச்செய்கிறது. உள்வெம்மையை உணருந்தோரும் தன் உடலின் திண்மையையும், காற்று மேலிட அலைகளாகி வந்தறைந்து கூசி நடுங்கச்செய்யும் போதெல்லாம் பிள்ளைப்பிராயத்தின் நொய்மையையும் அறியச்செய்கிறது. எதிர்நிற்பவனின் முழுக்கவனத்தையும் தன்னகத்தே திருப்பும் குழந்தை அல்லவா மழை. விண்ணையும் மண்ணையும் இணைக்கும் அலகிலா சரங்கள் ஒவ்வொன்றிலும் புவிலுள்ள ஒவ்வோர் அணுவுக்கும் விண்ணிலிருந்து விழி விழி எனும் செய்தி வந்து கொண்டேயிருக்கிறது.

புவியில் அனைத்தையும் பருப்பொருளாக கண்டு அறியும் அறிவுக்கெட்டாததாய் ஏழ்வானுக்கு அப்பால் எங்கோ இருக்கிறது வித்து உயிர் கொள்ளும் ரகசியம். இருக்கிறேன் என்னும் உணர்வுக்கும் முந்தையது அது. தேர்ந்த கருமான் ஒருவன் இதுவே அது என தன் பெட்டியிலிருந்து ஓர் திருகாணியை எடுத்து பொருத்துவது போல்  ஒவ்வோர் வடிவத்துக்குள்ளும் உயிரை வைத்து அனுப்பும் இறைவனது முகங்களில் உறையும் களிப்பே  அந்த உயிரனலை எழுப்பும் உலைத்துருத்திக்காற்று என்க.

தாமரைக்கண்ணன்
புதுச்சேரி 
07.08.2019

Comments

Popular posts from this blog

வலியது

நிறுவனத்தில் மேலாளர் ஸ்ரீக்கு பதவி உயர்வோடு நீர்சூழ் தீவாந்திர சிட்சை அளித்திருக்கிறார்கள். அக்கணம் மணமருள் பெருமானை துதித்தபடி அனைத்தையும் கைவிட்டு விட்டு நீங்கிவிட்டார். ஒருவாரம் கழித்து பார்த்தேன், பின் அழகிய சிங்கர் ஒருவருக்கு பரிவட்டம் கட்ட வந்திருந்தார். நலமா என்றேன் ஆமாம் என்று உதடடைந்ததும், காற்று தான் வருகிறது. இருவருடம் முன்புவரை துரத்தித்துரத்தி இவரை அவம் செய்த முதுகிழ மேலாளரும் அதே தீவிற்கு டிக்கெட் எடுத்திருக்கிறார்.

அறிதுயில்

மற்றுமோர் மென் தூறல் ஞாயிற்றுப் பயணம். மணிமாறன், கடலூர் சீனு அண்ணா, திருமா அண்ணா நான் நால்வரும் எட்டு மணிக்கு மதகடிப்பட்டை தாண்டுகிறோம். சமீபத்தில் வீடு மாற்றி திருவாண்டார் கோவில் வந்துவிட்டேன். மணியும் சீனு அண்ணனும் வீட்டிற்கு இப்போதுதான் வருகிறார்கள் சீனு அண்ணனின் தாடிநீளத்தை பார்த்து கீழ்வீட்டு காளி மிரண்டு துள்ளி எனக்குப்பின்னால் ஒளிந்து கொண்டான். மாலை திரும்பும்போது போனில் சீனு மாமா என்று கொஞ்சிய கவினும் அதேபோல மிரண்டான். பயணம் செஞ்சியை மையமாகக்கொண்டு திட்டமிடப்பட்டது. வழிநெடுக சமணத் தடங்களை அறிவிக்கும் பலகைகள். விழுப்புரம் தாண்டும்போதுதான் முதலில் தளவானூர் செல்வதாக முடிவெடுத்தோம். நானும் தளவானூரை நேரடியாக பார்த்ததில்லை. மணிமாறனுடன் செய்யும் பயணங்களில் உணவு விஷயத்தில் நான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பேன் காலை உணவை ஆறுமணிக்கே வாங்கித்தந்துவிடுவான், மாலை ஆறுமணிக்கு. மாற்று சக்கரத்தில் காற்றில்லை என்று சாலப்பரிந்த புன்னகையோடு மணி சொல்லிக்கொண்டிருக்கும்போது செல்வழியில் ஒரு கடையில் நிறுத்தினோம், புகை கூரை மேலெழுந்து ஒரு கொடிபோல ஆடிக்கொண்டிருந்தது. எளிய சுவை மிகுந்த உணவு, நா...

ஜல்லிக்கட்டு பேரணி சென்னை

இன்று நடந்த ஜல்லிக்கட்டுக்கான பேரணி நிச்சயம் ஒரு பேரனுபவம் தான் . முதலில் இவ்வளவு கூட்டம் வரும் என்றே எதிர்பார்க்கவில்லை. கலங்கரை விளக்கில் சென்று வரிசையில் நின்றபோதே தன்னார்வலர்கள் வந்து பேரணி பற்றி விளக்கிவிட்டு என்ன செய்யவேண்டும் என்றும் சொன்னார்கள்.  அமைதியாக ஆரம்பித்த பேரணியில் முழக்கங்கள் தொடர்ந்து எழ ஆரம்பித்தது. பின் ஒரு ரிலே ரேஸ் போல முழக்கங்கள் முன்னிருந்து பின்னாக பற்றிக்கொள்ள ஆரம்பித்தது. அதிலும் எனக்குபின் நின்ற சகோதரிகள் பேரணி ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை முழக்கங்களை நிறுத்தவேயில்லை. “நடத்துவோண்டா ஜல்லிக்கட்டு தடையைத்தாண்டி துள்ளிக்கிட்டு” எல்லாம் அதில் ஒரு சோறு பதம்.  வந்திருந்தவர்களில் எண்பது சதத்திற்கும் மேல் இளையோர்கள். அதனாலேயே உற்சாகமும் உணர்வெழுச்சியும் அதிகமாக இருந்தது. வெவ்வேறு ஊர்க்காரர்கள், தானே பதாகைகள் தயாரித்து கொண்டுவந்திருந்தவர்கள், வேற்று மொழி சகோதரர்கள் , சில வெளிநாட்டுக்காரர்கள் கூட கலந்து கொண்டனர்.  கூட்டம் மெல்ல மெல்ல அதன் உச்ச கட்ட உணர்வெழுச்சிக்கு செல்கையிலே நடுவிலே வழி ஒதுக்கப்பட்டது,    அலங்கரிக்கப்பட்ட ஜல...