Skip to main content

ஒரு ஹிச் ஹைக்கிங் பயணியுடன்

நண்பர் சிரிஷ் யாத்ரி இந்தூரைச் சேர்ந்த இளைஞர்(21). ஹிச் ஹைக்கிங் -  hitch hiking முறையில் இந்தியா முழுமையும் பயணிப்பவர். பயணத்திற்கு பணம் தேவையில்லை என்று நிறுவும் பயண முறை இது. லிப்ட் கேட்டு ஒரு இலக்கிற்கு செல்வது பின் அங்கிருந்து மீண்டும் லிப்ட், முழுப்பயணமும் இப்படித்தான். உணவு பயணத்தில் இரண்டாம்பட்சம்,  யாரேனும் உணவு வாங்கிக் கொடுத்தால், ஏற்றுக்கொள்வார்.   ஹிப்பித்தன்மை கொண்ட இம்முறை வெளிநாடுகளில் பயணிகளால் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் இப்போது பிரபலமாகிக்கொண்டு வருகிறது. ஒருவகையில் நமது துறவிகள், புனிதத்தல யாத்ரீகர்கள் பயணங்களோடு நெருங்கிய தொடர்பு உள்ள பயண முறை.

எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் இவரைப்பற்றிய செய்தி வந்திருந்தது. சிரிஷ் தன பயணத்தினூடாக புதுவை வந்தார். அவரைச் சந்தித்தோம், வில்லியனூரில் எனது வீட்டில் தங்கினார். அவரது வருகையும் ஒரு சிறிய உரையாடலும் இங்கு பதியப்பட்டுள்ளது.


சிரிஷ் யாத்ரியை நாங்கள் கண்டது நண்பர் மணிமாறனின் அலுவலக வாசலில், எந்தப்பூதம் சுமந்து வந்தது என்று தெரியாது, சரியான இடத்திற்கு சொன்ன நேரத்திற்கு முன்னதாகவே வந்திருந்தார்.சிரிஷை பற்றி படித்ததுமே ஒவ்வொருவரும் பெருவியப்புக்கும் அகஎழுச்சிக்கும் ஆட்பட்டோம், அவரை நேரில் கண்டதும் அது பன்மடங்காகியது. மாலை அருகிருந்த புதுவை கடற்கரையில் நண்பர்களுடன் சிறு சந்திப்பு, பின் நண்பர் அரிவீட்டிற்கு சென்று வந்தபின் வில்லியனூரில் ராத்தங்கல்.

சிரிஷுக்கு பயணிப்பது மிகவும் பிடித்திருந்திருக்கிறது, முதலில் இரு நாள் பயணம் துவங்கியவர் இப்போது மாதக்கணக்கில் பயணத்திலேயே இருக்கிறார். அடிக்கடி பையன் எங்கு காணாமல் போகிறான் என்று தெரியாத குடும்பத்தினர் உள்ளூர் பத்திரிக்கையொன்றில் இவரைப்பற்றிய சிறுபத்தி ஒன்றைக் கண்டபின்தான் தெளிந்திருக்கிறார்கள். முதுகில் உள்ள பயணப்பை மலையேற்ற வீரர்களுக்கானது. அதன் எடை பன்னிரெண்டு கிலோவுக்கு குறையாது, இளங்கலை இதழியல் முடித்தவர் முதலில் கிரியேட்டிவ் ரைட்டராக சில மாதங்கள் பணியாற்றிய போது, சிறு அறைக்குள் இருந்து கொண்டு உலகைப்பற்றி எழுதுவதை மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.





 பின் விளையாட்டுப்பொருட்கள் விற்கும் டெக்கத்லான் நிறுவனத்தில் சேர்ந்த பின் அவர் வாழ்வில் நிறைய மாற்றங்கள். மலையேற்றப் பயிற்சி முகாம்கள், நிறைய மனிதர்களுடனான சந்திப்புகள்.பின் பாரதம் முழுதும் ஹிச்ஹய்க்கிங் முறையில் பயணிக்க வேண்டும் என்று கிளம்பி விட்டார்.
அவர் பயண விவரங்களை பகிர்ந்து கொள்வது, சந்தித்த மனிதர்கள் பற்றி, தங்குமிடத்தேவை குறித்து தகவல் அளித்து உதவி பெறுவது  எல்லாமே சமூக வலைத்தளங்கள் மூலம் தான். 

அவர் முழுப்பயணமும் லாரிகள், டிரக்குகள், லோடு வண்டிகள், இருசக்கர வண்டிகளில். ஆரம்ப காலத்தில் சேரவேண்டிய இடத்தில் இறங்கிய பின் சிலர் பணம் எதிர்பார்க்க, இப்போதெல்லாம் சிரிஷ் தன் பயண முறையை ஓட்டுனரிடம் சொல்லி பணம் தரமுடியாது என தெளிவுறுத்திய பிறகேவண்டியில் ஏறுகிறார். செல்லிடம், அதன் நிலஅமைப்பு இவற்றை முன்பே தெரிந்து கொள்கிறார். 

அந்தந்த ஊரில் உள்ள சுற்றுலாத்தலங்களை பார்ப்பது முக்கியம் கிடையாது, நிலத்தை, மனிதர்களை, கடக்கும் இடங்களை, கவனிக்கிறார். அந்த இடத்தின் கலாசாரத்தை மரபை அறிவதில் ஆர்வம் உண்டு. உணவைப்பற்றி கவலைப்படுவதேயில்லை, கிடைப்பது எதுவாயினும் அமிழ்தெனவே கொள்கிறார் ( மணி முகம்சுளித்த கலக்கியை இறுதித்துளிவரை). நம் நண்பர்கள் ஜெய்ப்பூரில் இறக்கி விட்ட பிறகு, வெவ்வேறு ஊர்வழியே பெங்களூரு, தமிழகத்தில் வேலூர், சென்னை வந்து பின் புதுவை வந்திருந்தார்.

அன்றைய இரவு மிக அழகானது, நள்ளிரவு வரை உரையாடிக்கொண்டிருந்தோம், தென்னகக்கலாச்சாரம், சங்க இலக்கியம், பெரியார், அகழ்வாய்வுகள், காப்பியங்கள், பாரதியார், பிரெஞ்சிந்தியா என மிக நீண்ட உரையாடல், அவருக்கு இன்னும் தெரிந்துகொள்ள விருப்பம் இருக்கிறது. கொற்றவை புத்தகத்தையும் பாரதியார் கவிதைகளையும் பேச்சினிடையே காண்பித்தேன், புத்தகங்களைப்பிரித்து ஆழமுகர்ந்தார், இலக்கிய வாசனைல்லா. தமிழகத்தின் விழுமியங்கள் பற்றி ஒரு எளிய ஆங்கிலப்புத்தகம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
மறுநாள் காலை வில்லியனூரில் திருக்காமீசர் கோவிலுக்கு அழைத்துச் சென்றிருந்தேன். வெள்ளை வேஷ்டி கட்டிக்கொண்டதில் அவருக்கு பயங்கர மகிழ்ச்சி. அங்குள்ள குதிரை வீரர்தூண்களை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார். பின் நண்பர் திருமாவுடன் திருவக்கரை கல்மரப்பூங்கா, ஊசுட்டேரி சென்றுவந்தபின் பாண்டிச்சேரியை அவரது பாணியில் சுற்றிவந்தார். மாலை மீண்டும் கடற்கரையில் அதிக நண்பர்களுடன் சந்திப்பு. பின் அடுத்த நாள் காலை சென்றுவிட்டார்

நண்பர்கள் இளநாகனிடம் கொண்ட செவ்வி பின்வருமாறு 


ஏன் தொடர்ந்து பயணிக்கிறீர்கள்?

பயணம், ஒரு புலி குருதிச்சுவையை அறிவது போன்றது, ஒருமுறை ருசி தெரிந்துவிட்டால் பின் விடமுடியாது.


என்றாவது ஏன் இதைத்துவங்கினோம் என வருந்தியதுண்டா ?

ஒரேயொரு முறை, உடல்நலம் மிகவும் கெட்டுப்போனது, வெகுநேரம் தங்குமிடம் எதுவும் கிடைக்கவில்லை, அன்று மிகவும் உளத்தளர்ச்சியுற்றேன். அன்று ஒரு தம்பதி என்னை தங்கள் வீட்டுக்கு அழைத்துச்சென்று தங்க வைத்தனர், என் மனச்சோர்வை நீக்கி நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று எனக்கே புரியவைத்தனர், அவர்களுக்கு நன்றி. மீண்டும் அப்படி ஒரு நிலை நேராது என நம்புகிறேன்.



எப்படி இந்த எண்ணம் வந்தது ?

மோட்டார் சைக்கிள் டயரி புத்தகம் படித்தது ஒரு காரணம்



புத்தகம் படிப்பீர்களா ?

என் பயணப்பையில் எப்போதும் புத்தகம் உண்டு. புனைவுகளை விட ,  
அபுனைவுகள், சுய சரிதைகள் பிடிக்கும், காந்தியின் சத்தியசோதனை மிகவும் பிடிக்கும்.



எத்தனை காலம் உங்களால் இப்படி பயணிக்க முடியும் ? 

அதற்கு வயதும் சூழலும் ஒரு தடை இல்லை என்றே நினைக்கிறேன் , எல்லாக்காலத்திலும் இது சாத்தியமே.



இந்தியாவில் பலரும் பயணிக்கிறார்கள், உங்கள் பயணமுறை மட்டுமே வேறு, இதில் என்ன புதிதாய் இருக்கிறது?

ஆம், நான் இதை ஒப்புக்கொள்கிறேன், இருந்தாலும் நான் எனக்காக மட்டுமே பயணிக்கிறேன். என் அம்மாவுக்கு இது பிடிக்கவில்லை என்றாலும் கூட, நான் எனக்காகவே பயணிக்கிறேன், இது ஒருவகையில் சுயநலமே.



உங்கள் வருங்காலத்திட்டங்கள் என்ன?

இந்தப்பயண அனுபவங்களைக்கொண்டு என் முப்பதாவது வயதில் ஒரு படம் எடுக்க வேண்டும். அடுத்து வரும் வருடங்களில், இதே முறையில் உலகத்திலுள்ள வேறு நாடுகளில் பயணிக்க வேண்டும்.




சிரிஷ் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா என்றார் எங்களிடம், அது ஒரு பூ என்றதும் புன்னகைத்தார். அது ஆயிரம் கரம் நீட்டி உலகை அறியத்துவங்கும் இளஞ்சிவப்பு வாகையினப்பூ . 

தாமரைக்கண்ணன் 
புதுச்சேரி 
14.02.2019 


Comments

Popular posts from this blog

மரபுப் பயணம்

புதுவையின் நுழைவாயிலான மதகடிப்பட்டு கடந்த ஞாயிறு (1.4.18) அன்று தமிழகத்தின் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த சரித்திர ஆர்வலர்களை வரவேற்கும் இடமாக ஆகியிருந்தது. சோழர் வரலாற்று ஆய்வு சங்கம் ஒருங்கிணைத்திருந்த மரபுநடை அங்கிருந்துதான் துவங்கியது. புதுவை கடலூர் விழுப்புரம் அன்பர்கள் அன்றியும் சேலம் பெரம்பலூர் வேலூர் நண்பர்களும் சென்னைவாசிகளாக மாறிவிட்ட பல்லூர்க்காரர்களும் குழுமியிருந்தனர்.  ஜெயங்கொண்ட சோழமண்டலம், திரிபுவனமாதேவி சதுர்வேதிமங்கலத்தின் ஒருபகுதியான குந்தாங்குழி மகாதேவர் கோவிலில் இருந்து துவங்கினோம். பூவுதிரும் அசோக மரத்தடியில் இருந்து எழுபதே வயதேயான பேரிளைஞரான திரு வீரராகவன் எங்கள் கைபற்றி சோழர் காலத்துக்குள் கூட்டிச்சென்றார். சோழர்கால கோவில்கள், கல்வெட்டுகளில் குறிக்கப்பட்ட நிவந்தங்கள், நிவந்தங்களின் வகைகள், சோழர் கல்வெட்டுக்கும், பல்லவர் கல்வெட்டுக்குமான துவக்க வரிகள் என கடைசியிருக்கை எம்மனோர்க்கு எளிதில் விளங்காதவற்றை எளிமையாக விளக்கி  சொன்னார். அவரது பேச்சு கொண்டுசெல்லும் வழியெங்கும் நிரம்பி உதிரும் பூக்கூடை போல இருந்தது, அவரிடமிருந்து வரலாற்றுத்தகவல்கள் வந்து விழுந்து

மந்தஹாசம்

மேலாளர் அழைத்தார் என்ன என்றேன், நான் இரு நாட்களாக  இங்கில்லை, லீவ்  என்றார், தெரியும் என்றேன் புன்னகையுடன். எனது கணினி ஏன் திறப்பில் உள்ளது என்றார், முகத்தில் புன்னகை இல்லை. உற்றுப்பார்த்தேன், ஆம். தகவல்திருட்டு மிகவும் மோசமான விஷயம், அதுவும் நம்பிக்கை மோசடி தர்மத்துக்கு மாறானது. ஆழ்ந்த அமைதி, அலுவலகத்தின் பெண்பாலினர் அனைவரும் கடவுச்சொல் அறிவர், என்செய. "சார் ஒருவேள" என்று துவங்கி, அவர் வயதொத்த மூத்த பெண்மணி ஒருவரது பெயரை உச்சரித்தேன், மனிதர் முகத்தில் பெருமிதம் கலந்த மந்தஹாசம்.

அறிதுயில்

மற்றுமோர் மென் தூறல் ஞாயிற்றுப் பயணம். மணிமாறன், கடலூர் சீனு அண்ணா, திருமா அண்ணா நான் நால்வரும் எட்டு மணிக்கு மதகடிப்பட்டை தாண்டுகிறோம். சமீபத்தில் வீடு மாற்றி திருவாண்டார் கோவில் வந்துவிட்டேன். மணியும் சீனு அண்ணனும் வீட்டிற்கு இப்போதுதான் வருகிறார்கள் சீனு அண்ணனின் தாடிநீளத்தை பார்த்து கீழ்வீட்டு காளி மிரண்டு துள்ளி எனக்குப்பின்னால் ஒளிந்து கொண்டான். மாலை திரும்பும்போது போனில் சீனு மாமா என்று கொஞ்சிய கவினும் அதேபோல மிரண்டான். பயணம் செஞ்சியை மையமாகக்கொண்டு திட்டமிடப்பட்டது. வழிநெடுக சமணத் தடங்களை அறிவிக்கும் பலகைகள். விழுப்புரம் தாண்டும்போதுதான் முதலில் தளவானூர் செல்வதாக முடிவெடுத்தோம். நானும் தளவானூரை நேரடியாக பார்த்ததில்லை. மணிமாறனுடன் செய்யும் பயணங்களில் உணவு விஷயத்தில் நான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பேன் காலை உணவை ஆறுமணிக்கே வாங்கித்தந்துவிடுவான், மாலை ஆறுமணிக்கு. மாற்று சக்கரத்தில் காற்றில்லை என்று சாலப்பரிந்த புன்னகையோடு மணி சொல்லிக்கொண்டிருக்கும்போது செல்வழியில் ஒரு கடையில் நிறுத்தினோம், புகை கூரை மேலெழுந்து ஒரு கொடிபோல ஆடிக்கொண்டிருந்தது. எளிய சுவை மிகுந்த உணவு, நா